Saturday, May 19, 2012

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க கடலோர காவல் படையில் அதிநவீன ரோந்து கப்பல்

சென்னை: கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையில் ‘‘ராஜ்தரங்’’ என்ற அதிநவீன ரோந்து கப்பலை சேர்க்கும் விழா, சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ரோந்து கப்பலை இயக்கி பணியில் சேர்த்தார்.
மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ அளித்த பேட்டி: ‘ராஜ்தரங்’ என்ற ரோந்து கப்பல் தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை பாதுகாத்தல் மற்றும் கடலோரங்களை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக செயல்படும். இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ரோந்து பணியில் கப்பல் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு நிகழும் சம்பவங்கள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும். கடலோர காவல் படையில், தற்போது பணியில் சேர்ந்திருப்பது 8வது அதிநவீன ரோந்து கப்பலாகும்.

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்ளே வந்தனர். இதுபோல், மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, கடலோரங்களை பலப்படுத்த நவீன ரோந்து கப்பல்கள் கடலோர காவல் படையில் சேர்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன் வளத்துறை இணைந்து செயற்கைகோள் மூலம் கடலில் மீன்வளம் அதிகமுள்ள இடங்கள், கடல் எல்லைகள் போன்ற படங்களை எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதும், மீனவர்கள் கடலில் வழித்தவறி போவது தடுக்கப்படும். எல்லைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற விழிப்புணர்வு மீனவர்களுக்கு வரவேண்டும். கடலோர காவல் படை கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலோர காவல் படை மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகு மீது மோதி மீனவர்கள் உயிரிழக்க காரணம், கடலோர காவல் படை கப்பல் இல்லை. அந்த வழியாக சென்ற வேறு ஏதோ ஒரு கப்பல்தான் மீன்பிடி படகு மீது மோதியுள்ளது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More